கொஞ்சம் காபி கொஞ்சம் மெமரீஸ் - 7
கொஞ்சம் காபி
கொஞ்சம் மெமரீஸ் - 7
திருவாரூரில் பணியாற்றியபோது மாலை 03:00 மணிக்கு அலுவலக உதவியாளர் ராதாகிருஷ்ணன் பிளாஸ்க் உடன் வந்து விடுவார்.
சார், இன்னிக்கு வியாழக்கிழமை. போளி ஸ்பெஷல் வாசனில்.. என்பார்.
திருவாரூர் ஒரு சிறிய ஊர். ராஜகோபால் சார் அங்கு JR ஆக இருந்தபோது சொன்னது எனக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது.
ஊரே சின்ன் ஊர். இதுல பாதி கோவிலும் குளமுமே உள்ளது. மீதி பாதி தான் ஊர்.
ஊரை விட்டு வெளியே போனால் உடனேயே நாகப்பட்டினம் மாவட்டம் வந்து விடுகிறது. எதுக்கு தான் இப்படி பிரிச்சாங்களோ.. என்று கூறுவார்.
அந்த சின்ன ஊரில் இருக்கும் சின்ன ஹோடெல் தான் வாசன் கபே. காபி ரொம்ப பேமஸ் அங்கே.
03:00 மணிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கேன்களில் பால் வரும். 03:30க்கு போனால் மணக்க மணக்க சூடான காபி கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் ஸ்பெஷல் ஆக ஏதாவது ஒரு ஸ்னேக் இருக்கும்.
வியாழக்கிழமை போளி ஸ்பெஷல். எங்கள் ராதாகிருஷ்ணனுக்கு போளி பிடிக்கும். எனக்கு காபி பிடிக்கும்.
ஸோ, வியாழன் வந்தால் அவர் குதூகலமாகி விடுவார்.
மதியம் 03:30 மணிக்கு கிடைக்கும் காபி பெரும்பாலான இடங்களில் நன்றாகவே இருக்கும்.
வாசனைப் போலவே நாகப்பட்டினம் உமா விலும் மதியம் காபி நன்றாக இருக்கும்.
மயிலாடுதுறை பழைய காளியாக்குடி ஹோடெலில் காபியுடன் சுடச்சுட அல்வா கிடைக்கும். நாக்கை சப்புக் கொட்டியபடி ஒரு கூட்டமே அலை மோதிக்கொண்டிருக்கும் அல்வாவை சுவைக்க.
சென்னை வந்தபின் அதே போல மதியம் பிரஷ் பால் பிரஷ் டிகாஷன் காபி மயிலாப்பூர் சங்கீதாவில் கிடைத்தது என் பாக்கியம் தான். நான் அப்போது ஆர்.கே. மடம் சாலையில் இருந்த பால் கூட்டுறவு தணிக்கை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
என்ன வேலை இருந்தாலும் தூக்கி வைத்துவிட்டு பொடி நடையாய் சங்கீதா போய் காபி குடித்துவிட்டு வந்து தான் வேலையை தொடருவேன்.
அப்போது இயக்குனராக இருந்த ஓய்வுபெற்ற IAS அலுவலர் திரு சிவன் அருள் அவர்களும் என்னைப் போலவே பில்டர் காபி பிரியர்.
அவர் அறையில் நான் வேலையின் பொருட்டு இருக்கும்போது 03:30 மணி ஆகிவிட்டால் நான் நிலைகொள்ளாமல் தவிப்பதை பார்த்து உதவியாளரை கூப்பிட்டு இருவருக்கும் சேர்த்து சங்கீதாவில் காபி வாங்கி வரச் சொல்லிவிடுவார்.
பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு கேண்டீன் அமைக்க்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அப்பணிகளை செய்து முடித்தேன்.
இந்த கேண்டீனில் காபி பிரமாதமாக இருக்கவேண்டும் என்று வைராக்கியம் கொண்டு செயல்பட்டேன். காபி போடுவது எப்படி என்று முதல் சில நாட்களுக்கு கிச்சனிலேயே இருந்து சொல்லியும் கொடுத்தேன்.
சுட்டுப்போட்டாலும் கேண்டீன் சமயல் டீமுக்கு காபி போடவே வரவில்லை.
இன்றைய தேதி வரை தொடரும் சோகம் அது.
கடைசியில் அட்லீஸ்ட் நம் வரையாவது நல்ல காபி குடிப்போம் என்று முடிவு செய்து காபி தயாரித்து F&B சாரும் நானும் குடிக்க ஆரம்பித்து அது பிரபலமாகி
அங்கு வரும் அத்தனை ஆபிஸர்களும் அதன் மணத்தில் மயங்கி கேட்டு வாங்கி சுவைக்கத் தொடங்கிவிட்டனர்.
தம்பி ராஜராஜனும், கனகசபையும் வேறெந்த பிரபலமான ஹோடெல் காபியை விடவும் சிறப்பாக காபி போட்டுக் கொடுக்கிறார்கள்.
என்னுடைய பணி ஓய்வு நாள் அன்று எல்லோரும் தவறாமல் குறிப்பிட்டு பேசியது அந்த RCS காபி கிளப் காபியைப் பற்றி தான்.
காபியால் எனக்கு கிடைத்த பெருமை இது.
~
கொஞ்சம் மெமரீஸ்
காபியைப் ப்ற்றி நிறைய எழுதிவிட்டதால் மெமரீஸை நாளை வைத்துக் கொள்ளலாமா …. ?
.jpeg)


Comments
Post a Comment