கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 16

கொஞ்சம் காபி - கொஞ்சம் மெமரீஸ் - 16

மேலை நாடுகளில் காபி ஹவுஸ்கள் அறிவுஜீவிகளின் சங்கமமாகவும், சமூக, அரசியல் புரட்சிகர போராளிகள் கூடி விவாதிக்கும் இடமாகவும் செயல்பட்டு வந்தன.

கூட்டுறவுகளின் கைக்கு வந்த இந்தியா காபி ஹவுஸ் இந்த ஸ்டேடஸை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது.


துடிப்பான அரசியல் விவாதங்களுக்கான  இடமாக ஜெர்மன் காபி ஹவுஸ்களை இந்தியா காபி ஹவுஸ் பின்பற்ற வேண்டும் என்று ராம் மனோஹர் லோஹியா அறிவுறுத்தினார்.


காபிஷாப் கலாச்சாரத்திற்கு நம்பகத்தன்மையை இதன் மூலம் கொண்டு வர முயன்றார். 


இதனைத் தொடர்து இந்தியா காபி ஷாப்கள் புரட்சிகர கருத்துகளுக்கான மையமாக மாறியது.


புரட்சிக்கு காபி தேவை என்ற விதி தானாக சேர்ந்தது. 


Brewing Resistance: Indian Coffee House and the Emergency in Postcolonial India" 


என்ற புத்தகத்தில் , எழுத்தாளர் கிறிஸ்டின் விக்டோரியா மேஜிஸ்ட்ரெல்லி பிளைஸ், டெல்லியில் உள்ள இந்தியன் காபி ஹவுஸை அவசரநிலை கால எதிர்ப்பின் மையமாக விவரிக்கிறார். 


ஒரு கோப்பைக்கு வெறும் 35 பைசாவுடன், காபி ஹவுஸ் இலவச விவாதத்திற்கான இடமாக மாறியது.


அடக்குமுறை மற்றும் குறைக்கப்பட்ட சிவில் உரிமைகளின் போது இது முக்கியமானது. 


கன்னாட் பிளேஸில், மாணவர்கள், அரசியல் ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் மற்றும் பிறர் அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் போராட்டங்களை வடிவமைப்பதற்கான ஒரு முக்கிய சந்திப்பு இடமாக இது உருவெடுத்தது. 


கோப்பைகளின் சத்தம், காபி மற்றும் கட்லெட்டுகளின் நறுமணத்திற்கு மத்தியில் இந்த ரகசிய கூட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட்டன.


இந்தியன் காபி ஹவுஸ் ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி மையமாகவும் செயல்பட்டது. 


பிரதான ஊடகங்கள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டதால், தகவல்கள் வாய்மொழி, துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பிபிசி போன்ற வெளிநாட்டு வானொலி ஒலிபரப்புகள் மூலம் பரவின. 


எதிர்ப்பின் உணர்வை உயிர்ப்புடன் வைத்திருக்க இது அவசியமானது. 


போராட்டங்களை ஒழுங்கமைத்தல், தன்னார்வலர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் தலைமறைவு இயக்கங்களுக்கான உத்திகளை வகுப்பதற்கான இடமாக காபி ஹவுஸ் மாறியது.


இருப்பினும், இந்தியன் காபி ஹவுஸ் என்ற சரணாலயம், அரசின் எதிர்ப்புகளை அடக்கும் முயற்சிகளிலிருந்து தப்பவில்லை.


மே 15, 1976 அன்று, முன் அறிவிப்பின்றி, புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் (NDMC) அதிகாரிகள், தொழிலாளர்களை வளாகத்தை காலி செய்ய உத்தரவிட்டனர். 


நண்பகலுக்குள், கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு பலத்த அடியாக இருந்தது. 


பல வழக்கமான வாடிக்கையாளர்கள் ஆழ்ந்த இழப்பை உணர்ந்தனர். 


காபி ஹவுஸ் இடிப்பு என்பது ஒரு கட்டிடத்தின் அழிவை விட அதிகம். 


இது அரசியல் மற்றும் அறிவுசார் ஈடுபாட்டின் ஒரு முக்கியமான இடத்தை இடிக்கும் முயற்சியாகும். 


அதிகாரப்பூர்வ விளக்கம் கட்டிடத்தின் பாழடைந்த நிலையை மேற்கோள் காட்டியிருந்தாலும், அதன் சுவர்களுக்குள் வளர்க்கப்பட்ட வளர்ந்து வரும் எதிர்ப்புகளை அடக்குவதே உண்மையான நோக்கம் என்று பலர் நம்பினர்.


இந்தியன் காபி ஹவுஸின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பல்வேறு அரசியல் குழுக்களிடையே கூட்டணிகளை வளர்த்ததிலான அதன் பங்கு. 


சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனதா கட்சியின் சில உறுப்பினர்கள் கூட அவசரநிலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பில் பொதுவான நிலையைக் கண்டறிந்தனர். 


அரசாங்கத்திற்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த முன்னணியை அமைப்பதில் இந்தக் கூட்டணிகள் மிக முக்கியமானவை. 


காபி ஹவுஸ் ஒரு நடுநிலையான நிலையை கூட்டணிக்கு வழங்கியது. 


இந்த ஒற்றுமை உணர்வும் கூட்டு நடவடிக்கையும் இறுதியில் அவசரநிலையை நீக்குவதற்கும் இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும் முக்கிய பங்கு வகித்தன.


இறுதியில் சர்வாதிகாரம் வீழ்ந்தது. சாதாரண மக்களின் கையில் அதிகாரம் வந்தது.


மேலே குறிப்பிட்ட அந்த புத்தகத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி சிங், "காஃபி ஹவுஸ் என்பது கருத்துக்கள் உருவாகும் இடம். ஜனநாயகத்திற்கு, காஃபி ஹவுஸ் அவசியம்" என்று கூறி முடிக்கிறார்.


(இந்தியா காபி ஹவுஸ் குறித்த மேற்கண்ட எமர்ஜென்ஸி கால தகவல்களில் பல Indian Express இல் வெளிவந்த சதாப் ஹுஸைனின் ஒரு கட்டுரையில் இருந்து எடுத்துக் கொண்டுள்ளேன்.

நன்றி 🙏 The Indian Express) 

~


கொஞ்சம் மெமரீஸ் :


குமுதம் தான் எனக்கு படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன்.


இந்நிலையில் வாராந்திர ராணி எதிர் வீட்டு வரதராஜ் நைனா மூலம் அறிமுகமாகியது. 


குமுதத்தை விட பெரிய சைஸ். குடும்ப பத்திரிக்கை என்று போட்டிருப்பார்கள். படு கவர்ச்சியாக நடிகைகள் படங்கள் நிறைய இருக்கும். 


இருந்தும் நிறைய லோயர் மிடில் கிளாஸ் குடும்பங்களில் ராணி வாங்குவார்கள்.

~


குரங்கு குசலா என்று ஒரு கார்ட்டூன் காரக்டர் பகுதி ஒவ்வொரு வாரமும் வரும். அப்போது ஆர்வமுடன் அதை பார்ப்போம். இன்று நினைத்தால் இவ்வளவு மொக்கையையாய் ரசித்தோம் என்று தோன்றுகிறது. 


இது தவிர அல்லி பதில்கள் என்று எக்கச்சக்கமாய் சினிமா பற்றிய கேள்விகள் அடங்கிய பகுதி ஒன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

~


அ.மா.சாமி அவ்வப்போது எழுதும் பேய்க் கதைகளை தொடர்ந்து படித்திருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத் தான் இருக்கிறது.


ராணிமுத்து என்று  மாதம் ஒருமுறை நாவல் புத்தகமும் ராணி பத்திரிக்கையின் சகோதரப் பத்திரிக்கையாக வந்தது. 


லஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, ராஜம் கிருஷ்ணன் போன்றோர்களின் நல்ல நாவல்கள் அதில் வந்திருக்கின்றன. 


ஆனால் இதைவிட அவர்கள் பேமஸ் ஆனது வேறொரு விஷத்தில் தான். 


அது பாலமுருகன் படம் போட்ட தினசரி காலண்டர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டது தான்.


தொண்ணூறுகளில் நான் கும்பகோணத்தில் பணியாற்றிய காலத்தில் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் மனைவி தொடர்ந்து ராணி முத்து படிப்பவர். அப்போதுதான் தமிழ் படிக்க கற்றுக்கொண்டிருந்த என் மனைவிக்கும் அவர் மூலம் ராணிமுத்து படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.


பல ஆண்டுகள் கழித்து நான் சமீபத்தில் அவரை என் மனைவியுடன் சென்னையில் சந்தித்தபோது அவர் வீட்டில் லேட்டஸ்ட் ராணி முத்து இதழ் ஒன்றைப் பார்த்தேன். 


பேசி முடித்து கிளம்பும்போது கூடவே வந்திருந்த என் மனைவி  மகிழ்ச்சியுடன் ராணிமுத்து நாவலை லவட்டிக் கொண்டு வந்துவிட்டார். 


மொத்தத்தில் ராணி முத்துவைவிட ராணி ஒரு மொக்கை பத்திரிக்கை தான். 

~


Comments