லைப்ரரி 'நானும் நீதிபதி ஆனேன்' By கே சந்துரு
லைப்ரரி
சென்ற ஞாயிறு அன்று புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் வாங்கினேன்.
பெரும்பாலும் நூல்கள் பற்றி வெளிவரும் நான் படித்த ரிவியூக்களின் அடிப்படையிலேயே அவற்றை வாங்கினேன்.
வாங்கிய புத்தகங்களில் முதலில் படிக்க எடுத்தது முன்னாள் நீதியரசர் கே. சந்துரு அவர்கள் எழுதிய 'நானும் நீதிபதி ஆனேன்'.
ஆபீஸுக்கு போய் வரும்போது மெட்ரோவில் கிடைக்கும் 1 மணி நேரம் புத்தகம் படிக்க அல்ட்டிமேட்டான நேரம். அந்த நேரத்தில் இப்புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
புத்தக முன்னுரையில் ஓராண்டு பிராக்டீஸ் கூட இல்லாத சில இளம் வழக்கறிஞர்களும் சீனியர்களுடன் சேர்ந்து இவருக்கு எதிராக எழுதிய ஒரு கடிதத்தினை குறிப்பிட்டு அதற்கு எதிர்வினையாக தன் சுய சரிதை எழுதப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆரம்பமே என்னை திடுக்கிட வைத்தது.
புத்தகமும் அதற்கேற்ப, அவர் மாணவர் இயக்கத்தில் இருந்த காலத்திலும், சட்டம் படித்த காலத்திலும், இடதுசாரி இயக்கத்தில் இருந்த காலத்திலும், அதன்பின்பு வழக்குரைஞர் ஆக பணியாற்றிய காலத்திலும், நீதிபதி ஆன பின்பும் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து, தன்னைப் பற்றிய மேட்டிமைத் தனத்துடன் தனது பராக்கிரமங்களை பறைசாற்றுவதாய் எழுதப்பட்டுள்ளது போலவே இருக்கிறது.
மேலும், தானும் ஒரு காலத்தில் இளவயதில் நீதிபதியையே கேள்வி கேட்டு கோபப்படுத்தியதை நினைவு கூர்ந்ததன் மூலம் அவருக்கு எதிராக இப்போது வரிந்து கட்டிய இப்புதிய இளைஞர்களுக்கு 'நானும் ரௌடி தான்' என்பதை பதிய வைக்க முயல்கிறாரோ என்ற சந்தேகம் படிக்கும் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
சுய சரிதை என்பது எழுதுபவர் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதுவே எதிர்பார்ப்பாக இருக்கும்.
நான் படித்த சில நல்ல சுய சரிதைகள் :
1. சத்திய சோதனை - மகாத்மா காந்தி
2. என் சரித்திரம் - டாக்டர் உவேசா
3. எனது போராட்டங்கள் - மபொசி
ஆனால் நீதியரசரின் இந்த சுய சரிதையில் தனது பிறப்பு, இளவயது வாழ்க்கை, குடும்பம், குழந்தைகள் போன்ற அனைத்து விவரங்களையும் கவனமாய் தவிர்த்திருக்கிறார்.
மொத்தத்தில் சுவாரஸியமற்ற புள்ளிவிவரங்களையும், பல்வேறு ஆணையங்களின் முரண்பட்ட அறிக்கைகளையும், எல்லாவற்றையும் விட திகட்ட திகட்ட மனித உரிமை மீறல், போலிஸ் அத்து மீறல், ஜெயிலில் அடி உதை, லாக் அப் மரணங்கள் என்று சம்பவக் கோர்வைகள் அற்ற ஜல்லியடி தொகுப்பாகவே இப்புத்தகம் இருக்கிறது.
அகாடமிக் காரணங்களுக்காக சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த புத்தகம் ஓரளவு பயன்படலாமே அன்றி என்னை போன்ற சாமானியர்களுக்கு கண்டிப்பாக இல்லை.



Comments
Post a Comment