இசை - காலம் மறந்த கலைஞன் - புலமைப்பித்தன்
இசை
காலம் மறந்த கலைஞன் - புலமைப்பித்தன்
கங்கை நதியோரம்
ராமன் நடந்தான்
கண்ணின்மணி சீதை
தானும் நடந்தாள்
மெல்ல நடந்தாள்..
~
மங்கையவள் சீதை
முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில்
கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
~
இந்த பாடலை எழுதியது யார் என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள். இசை யார் என்று கேட்டால் MSV என்பீர்கள். இல்லையா..
இல்லை.
புலமைப்பித்தன் என்றொரு பாடலாசிரியன் இருந்தான். மிக அற்புதமான பல பாடல்களை எழுதினான். அவன் போதாத நேரம் அவனை கண்ணதாசன், வாலி என்ற இரு மாபெரும் மனிதர்கள் கோலோச்சிய காலத்தில் அவனையும் பாடல் எழுத வைத்தது.
பாடல்கள் எவ்வளவு தான் அருமையாக இருந்தாலும் பெயர் அந்த இருவருக்குத் தான் போய் சேர்ந்தது.
அப்படித் தான் இந்த பாடலும்.
~
கோவர்தனன் என்றொரு இசைஞர் இருந்தார். MSV யிடம் உதவியாளராக இருந்தார். பழைய பட டைட்டில்களில் MSV பெயருடன் உதவி கோவர்தனன் என்று இவர் பெயரும் வரும்.
பட்டினத்தில் பூதம் உட்பட சில படங்களுக்கு இசையமைத்த இவருக்கு மீண்டும் இசையமைக்கும் வாய்ப்பு வரப்பிரசாதம் என்னும் படம் மூலம் கிட்டியது. வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த புதியவர், இளையவர் ஒருவரை துணைக்கு வைத்துக் கொண்டார் ஆர்கெஸ்ட்ரேஷனுக்காக.
இருவரும் சேர்ந்து படத்தின் சிச்சுவேஷனுக்கு ஏற்ற பொருத்தமான இந்த பாடலை கலக்கலாக வழங்கினார்கள். 1976இன் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் முன்னனியில் நின்றது இந்த பாடல்.
~
அந்த புதியவர், இளையவர் யாரென்று யூகித்திருப்பீர்களே இன்னேரம்..
அவர் இளையராஜா தான்.
~
யேசுதாஸ் மற்றும் வாணிஜெயராம் இருவரும் ஜீவனுடன் பாடினார்கள் இப்பாடலை.
எழுபதுகளின் திரைப்பாடல் ரசிகர்களின் ஜீவனில் கலந்திருக்கும் பாடல்களில் இன்று இதுவும் ஒன்று.
~
விளையாட்டுப்பிள்ளை
மணல்வீடு அல்ல
விதியென்னும் காற்றில் பறிபோவதல்ல...
கங்கை நதியோரம்.....
ஆஹா....


Comments
Post a Comment