அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன் 


ரியாக ஒரு ஆண்டுக்கு முன் facebook ல் நான் துவக்கிய ஒரு தொடர் பதிவு அஸ்வத்தாமன். எப்படி இதை எழுதினேன் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. 

நான் என் பாட்டி மூலம்  கேட்டறிந்தவைகளையும், பல்வேறு நூல்களில் படித்தவைகளையும் கோர்த்து எழுதிய தொடர் அது.

மீண்டும் அவைகளை படிக்கவேண்டும் போல் இருக்கிறது.. பதிவிடுங்கள் என்று நண்பர் திரு விக்கிரமாதித்தன் ஜி கூறியதனாலும், சமீபகாலத்தில் நண்பர்கள் வட்டத்தில்  இணைத்துள்ள புதிய நண்பர்களுக்காகவும் மீண்டும் தொடராக அஸ்வத்தாமன்.

ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இனி, அஸ்வத்தாமன்.
~

சிறு வயதில் தீபாவளி அன்று எங்களுக்கு பாட்டி தான் தலையில் எண்ணெய் வைப்பார். தலையில் எண்ணெய் வைப்பதற்கு முன் ஸ்லோகம் ஒன்று சொல்லிக்கொண்டே இரு தொடைகளிலும் நல்லெண்ணெய்யால் ஏழு பொட்டுகள் வைப்பார். எதற்கு என்று  அவரிடம் கேட்டபோது அவர்களைப்போல என்றும் சிரஞ்சீவியாய் நீங்கள் வாழ வேண்டும். அதான் வேண்டிக்கொண்டு எண்ணெய் வைத்தேன் என்பார். ஒவ்வொரு தீபாவளி அன்றும் இது தொடரும். 
~

சிரஞ்சீவி என்றால் என்ன? யார் அந்த சிரஞ்சீவிகள் ? என்று பார்த்தால் சிரஞ்சீவிகள் என்பதற்கு மரணமற்ற பெருவாழ்வு வாழ்பவர்கள் என்றும் இந்த கலியுகம் முடியும் வரை அவர்கள் இந்த பேரண்டத்தில் நம்மோடு ஜீவித்திருப்பார்கள் என்றும் நமது புராண நூல்கள் கூறுகின்றன. 

சரி யார் அந்த சிரஞ்சீவிகள் ? 

1. அஸ்வத்தாமன்
2. மஹாபலி
3. ஹனுமான்
4. வியாசர்
5. விபீஷணன்
6. கிருபர்
7. பரசுராமர்.
~

அவர்கள் இந்த உலகில் இன்னமும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது நம்பிக்கை இது.
~

லிஸ்டில் முதலாவது இருப்பது அஸ்வத்தாமா. மகாபாரதம் படித்தவர்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரிந்திருக்கலாம். அஸ்வத்தாமாவிற்கு எப்படி இந்த சிரஞ்சீவித் தன்மை கிடைத்தது. வரமா ? சாபமா ?
~

மற்றவர்கள் அனைவருக்கும் வரமாக கிடைத்த சிரஞ்சீவித் தன்மை அஸ்வத்தாமனுக்கு சாபமாக வந்தது. 

என்ன சாபம் அது ? யார் இந்த சாபத்தை அவனுக்கு கொடுத்தது ? சாபம் பெறும் அளவிற்கு அவன் புரிந்த கொடுஞ்செயல் என்ன?  நிஜமாகவே அவ்வளவு பெரிய கொடுஞ்செயலா அது ?
~

பார்க்கலாம் 



Comments