பயணம் - கூர்க் - அரசியல்

பயணம்

கூர்க் - அரசியல்

Once a year go some place, you have never been before.
Dalai Lama

தற்கால அரசியல் 

1947 இந்திய விடுதலைக்குப் பின் கூர்க் ஒரு மாகாணமாக இருந்த காலத்தில் நடைபெற்ற முதலாவது பொது தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக என். சோமண்ணா போட்டியிட்டார். 

அப்போதே கூர்கை மைசூர் மாகாணத்துடன் இணைக்கும் திட்டம் ஒன்று உருவாகியிருந்தது. 

அதனை விரும்பாத தோட்ட முதலாளிகள் காங்கிரஸ் வேட்பாளர் சோமண்ணாவை எதிர்த்து  கே.டி. உத்தப்பா என்னும் சுயேச்சை வேட்பாளரை ஒருமனதாக நிறுத்தினர். 

ஆனாலும் காங்கிரஸ் கிட்டத்தட்ட முப்பதாயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்று கூர்க் பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றியது. 

இதன் மூலம் கூர்க் மக்களும் நாட்டு விடுதலைக்கு காரணமாக இருந்த காங்கிரசுக்கு தங்களின் ஆதரவை பெருவாரியாக வழங்கி  தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

பின்னர் 1950ல் கூர்க் மைசூர் மாகாணத்துடன் இணைக்கப்பட்ட பிறகு கூர்க் பிராந்தியம் மங்களூர் பாராளுமன்ற  தொகுதியுடன் இணைக்கப்பட்டது. 

1952 முதல் 1989 முடிய தொடர்ச்சியாக காங்கிரசின் கோட்டையாக இருந்த மங்களூர் தொகுதி 1989 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியிடம் முதன்முறையாக தோல்வியுற்றது. 

இதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜக விடம் காங்கிரஸ் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கிறது. இழந்த கோட்டையை இன்னமும் மீட்க முடியவில்லை. இப்போது மங்களூர் கர்நாடக பாஜக வின் முக்கியமான கோட்டை. 

 2008ல் தொகுதி மறுசீரமைப்பில்   மங்களூர் தொகுதியில் இருந்த குடகு மாவட்டம் மைசூர் பாராளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது.  

2009 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கைப்பற்றிய மைசூர் தொகுதி, 2014 தேர்தலில் பாஜக வசம் வந்தது. 

குடகு மாவட்டம் உள்ளடங்கிய மைசூர் பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக தற்போது பாஜகவின் ஸ்ரீ பிரதாப சிம்மா பணியாற்றி வருகிறார். 

குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, விராஜ்பேட் என்று இரண்டு சட்ட சபை தொகுதிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் அதே நடைமுறையிலேயே சட்ட சபைக்கும் குடகு மக்கள் வாக்களிக்கின்றனர்.

குடகின் இரண்டு சட்ட மன்ற தொகுதிகளும் தொடர்ச்சியாக பாஜக வசமே உள்ளது. 

குடகு மாவட்டத்தை  தன்னாட்சி உரிமை பெற்ற  கூர்க் மலை பிராந்தியமாக மாற்ற வேண்டி கொடவா ராஷ்டிரிய சமிதி மற்றும் கொடவா தேசிய கவுன்சில் ஆகியவை போராடிக்கொண்டிருக்கின்றன. 
~


Comments