அஸ்வத்தாமன் - 2
அஸ்வத்தாமன்
(தொடர்ச்சி....2)
மற்ற ஆறு பேருக்கும் வரமாக கிடைத்த சிரஞ்சீவித் தன்மை அஸ்வத்தாமனுக்கு சாபத்தால் கிடைத்தது.
அந்த சாபத்தை அவனுக்கு கொடுத்தது பகவான் கிருஷ்ணர்.
அஸ்வத்தாமன் கிருஷ்ணரால் ஏன் சபிக்கப்பட்டான் ?....
பார்க்கலாம்.
~
அஸ்வத்தாமன் யார் என்று தெரிந்து கொள்வதற்கு முன் முதலில் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம். குருக்ஷேத்திர யுத்த முடிவில் கௌரவர் பக்கம் யார் கடைசியில் எஞ்சி நின்றது என்றால் இரண்டு பேர் மட்டுமே. ஒன்று அஸ்வத்தாமன். மற்றொருவர் கிருபர்.
பாண்டவர் பக்கமும் பெரிதாக யாரும் மிஞ்சி நிற்கவில்லை. அவர்களின் மொத்தப் படையும் அழிந்துபோய் பாண்டவர்கள் மற்றும் அவர்களுடன் வெகு சிலரே எஞ்சினர்.
~
அடுத்த ஒரு முக்கியமான தகவல் அஸ்வத்தாமன் ஒரு மகாரதி.
யுத்தத்தில் படை நடத்துவதிலும், வியூகங்கள் வகுப்பதிலும், எதிரிகள் மீது தாக்குதல்கள் தொடுப்பதிலும் முன் நிற்கும் தளகர்த்தர்களை ஐந்து வகைகளில் பிரிக்கலாம்.
1. ரதி
2. அதிரதி
3. மகாரதி
4. அதிமகாரதி
5. மகாமகாரதி
~
ரதி எனப்படுவோர் 5000 படைவீரர்கள் கொண்ட படைகள் மீது போர் தொடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.
சகுனி, சிசுபாலன், போன்றோரும் துரியோதனனின் 90 க்கு மேற்பட்ட தம்பிகளும் ரதி வகையை சேர்ந்த தளகர்த்தர்கள்.
~
அதிரதி எனப்படுவோர் 12 ரதிகளுக்கு சமமானவர்கள். அல்லது 60,000 படைவீரர்கள் கொண்ட படைகள் மீது போர் தொடுக்கும் வல்லமை பெற்றவர்கள்.
தர்மர், நகுலன், சகாதேவன், துச்சாதனன், ஜெயத்ரதன் மற்றும் துரியோதனன் போன்றோர் அதிரதி என்ற பெருமைமிக்க வீரர்கள்.
~
அடுத்து மகாரதி. 12 அதிரதிகளுக்கு சமானமானவர்கள். 7,20,000 வீரர்கள் கொண்ட படைகளுடன் மோதும் வலிமை பெற்றவர்கள்.
பீஷ்மர், துரோணர், அர்ஜுனன், கர்ணன், பீமன்... இவர்களுடன் அஸ்வத்தாமனும் மகாரதி வரிசையில் வருபவன்.
அஸ்வத்தாமன் ஒரு மகத்தான வீரன்.
~
அடுத்து அதிமகாரதி
12 மகாரதிகளுக்கு இணையானவர்கள். 86,40,000 வீரர்களுடன் சண்டை போடும் திறன் மிக்கோர்.
ராமர், கிருஷ்ணர், இந்திரஜித், ஹனுமார் போன்றோருடன்
சிவனின் அவதாரங்களாகிய வீரபத்ரர் பைரவர் ஆகியோரும் அதிமகாரதி ஆவார்கள்.
~
இந்த படி நிலையில் முதன்மையானோர் மகாமகாரதி. இவர்கள் 12 அதிமகாரதிகளுக்கு இணையாக அல்லது 20,73,60,000 வீரர்களுடன் போர்புரியும் திறன் பெற்றோர்.
இவர்களே மகத்தானவர்கள்.
முழுமுதல் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்கா, கணேசர் மற்றும் கார்த்திகேயர் ஆகியோரே மகாமகாரதிகள். அவர்களை மிஞ்சி எவருமிலர்.
~
கீழிருந்து மேலாக செல்லும் வரிசையில் மூன்றாவது நிலையில் இருந்த மாவீரன் அஸ்வத்தாமன்.
அவனுக்கு ஏன் சிரஞ்சீவித் தன்மை சாபமாக கிடைத்தது ?
பார்க்கலாம்.



Comments
Post a Comment